சனி, 16 ஜூன், 2018

மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 02 பேசாலைதாஸ்


கிராமிய பாடல்களில் நெருடல், வருடல், தர்க்கம், குதர்க்கம், கிண்டல், நையாண்டி, குத்தல் இப்படியான பவிதமான இரசனைகள் இழையோடும். மீனவர்களின் அம்பா பாட்டில், இது சொல்லத்தேவையில்லை, மிக அதிகமாக தென்படும். கஸ்டப்பட்டு உழைக்கும் மீனவன் தனது ஆத்திரத்தை, மன உளைச்சலை சம்மாட்டியார் மீதும், அவரது கையாளாக செயல்படும் மண்டாடியார் மீதும் அம்பா பாடலில் கம்பீரமாக எதிரொலிக்கும், குறிப்பாக சம்மாட்டியரின் மனைவிமார்,  வைப்பட்டிகள், மண்டாடியாரின் மனைவிமார்கள். இந்த பாடலில் சிக்குப்படுவார்கள். உதாரணத்துக்கு " சம்மாட்டி சம்சாரம், ஏலோ ஏலோ, பார்த்துட்டு போறாளே! ஏலோ ஏலோ, அட பாவிமகள் சம்சாரம் ஏலோ ஏலோ, படுக்கையிலே பத்துப்பணம் எலோ ஏலோ, கூட்டிக்கொடுக்கச் சொல்லுவாளோ ஏலோ ஏலோ, இப்படியாக அம்பா பாடல் விரிந்து செல்லும், எழுதப்படாத தமிழ் இலக்கிய பொக்கிசங்கள் இது! இங்கே மெலிஞ்சி முனையின் கவிஞன் தமயந்தி பதிவு செய்த ஒரு பாடலின் பின்புலத்தை அப்படியே பிரதிபண்ணி உங்களுக்கு தருகின்றேன்-
சம்மாட்டியின் தோணியில் கூலிக்குச் செல்லும் மீனவன்.
அவனுக்கு தினக்கூலியாக பத்துப் பணம் கொடுப்பதுதான் நீதி.
ஆனால், சம்மாட்டியோ தினக்கூலியாக ஒருபணம் மட்டும் கொடுத்து தினமும் தொழிலாளியின் உழப்பைச் சுரண்டுகிறான்.
அதிகாரம் படைத்த சம்மாட்டியை எதிர்த்துக் குரல் உயர்த்த முடியாது.
குடியிருக்கும் ஒத்தைக் குடிசையும் சாம்பலாகி விடும்.
காத்திருந்த மீனவன் ஒருநாள் மீன்பாடு அமோகமாக நடக்கும் சமயத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறான்.
அதிகாலைக்கு முன்னதாக சம்மாட்டியின் ஏவலாள் வந்து மீனவனைத் துயிலெழுப்புகிறான்.
ஆதிநற் தமிழில் திட்டி அவனை திருப்பி அனுப்புகிறான் மீனவன்.
(அந்தப் பாடலை இதில் தவிர்க்கிறேன்) பின்பு,
சம்மாட்டியே நேரில் வந்து மீனவனின் குடிசை முன்றலில் நின்று அவனைத் துயிலெழுப்புகிறார்.
அந்த உரையாடல்தான் இப் பாடல்.
1ம் முறை துயிலெழுப்பும்போது; "விடிவெள்ளி எழட்டும்" என்று சொல்கிறான்.
2ம்முறை கூரையில் சேவல் கூவட்டும் என்கிறான்.
3ம் முறை; "இரவிரவாக எனது உழைப்பில் களைத்த உடம்பைப் பிடித்துவிட்டு சற்று முன்னர்தான் எனது நெஞ்சிலேயே கண்ணயர்ந்தாள் மனைவி சரசு. அவள் எழும்பட்டும்" என்கிறான்.
4ம் முறை; இரவு அணைத்த சங்கில் திரியிட்ட விளக்கு குந்தில் எங்கோ இருக்கிறது தேடியெடுத்து கொழுத்திவிட்டு வருகிறேன்" என்கிறான்.
5ம் முறை; "கோவணம் கட்டுகிற அரைஞாண் கொடியைத் தேடுகிறேன்" என்கிறான்.
6ம் முறை; "சுக்குத்தண்ணி வைப்பதற்காக அடுப்பு மூட்டுகிறேன்" என்கிறான்.
7ம் முறை; "அடுப்பில் வைத்த சுக்குத்தண்ணி கொதிக்கவேண்டும்" என்கிறான்.
8ம் முறை; "வெற்றிலை போட கொட்டைப் பாக்கு எங்கோ உருண்டு மறைந்து விட்டது, அதைத் தேடுகிறேன்" என்கிறான்.
9ம் முறை; "தோணிக்கு பாய் வலிக்கும் கம்பான் கயிற்றைத் தேடுகிறேன்" என்கிறான்.
சம்மாட்டி ஒவ்வொரு தடவையும் அவனைத் துயிலெழுப்புப்போதும், மீனவனின் தினக்கூலியை ஒவ்வொரு பணமாக உயர்த்துகிறார்.
10ம் முறை துயிலெழுப்பும்போது சம்மாடி பத்துப் பணம் தருகிறேன் என்பதைச் சொல்கிறார்.
அதன் பின்புதான் மீனவன் புறப்படுகிறான்.
பத்துப் பணம் கூலி
(அம்பா)
--------------------
ஒத்தப் பணந் தாறேன்
ஓடிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
வெள்ளி முளைக்க வேணும்
ரெண்டுபணம் தாறேன்
ஏகி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கோழிகூவ வேணும்
மூணு பணம் தாறேன்
முந்தி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சரசு எழும்ப வேணும்
நாலு பணம் தாறேன்
முடுக வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சங்கு விளக்கக் காணோம்
அஞ்சு பணம் தாறேன்
துள்ளி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
இடுப்புக் கொடியக் காணோம்
ஆறுபணம் தாறேன்
சுறுக வாடா ஏலையா
கொஞ்சம்பொறு
வாறேன் சுள்ளி மூளவேணும்
ஏழு பணம் தாறேன்
ஏறிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சுக்கு வேகவேணும்
எட்டுப்பணம் தாறேன்
எட்டிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கொட்டப் பாக்கக் காணோம்
ஒன்பதுபணம் தாறேன்
விசுக்கா வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கம்பான் கயித்தக் காணோம்
பத்துப்பணம் தாறேன்
பாவிப்பயலே வாடா
இந்தா வாறன் திறேவே
அட்டியில்லைத் துறைக்கே
புகைப்பட கலைஞனும், கவிஞனுமான மெலிஞ்சிமுனை தமயந்திக்கு மீண்டுமொரு நன்றி நவிலல், மீனவர் சார்பாக. 
பேசாலைதாஸ்


2 கருத்துகள்:

  1. மேலே சொன்ன வரிகள் அனைத்தும் ...அப்பன்டமான பொய்... ஆம் எனது பரம்பரையும் சம்மாட்டி தான்... என் சிறு வயதில் இருந்து இன்றுவரை நான் பார்த்திருக்கிறேன் எம் படகில் செல்லும் மீனவர்களுக்கு என் பப்பாமார்களும் அய்யன்மார்களும் செல்வதை மனம்போல் வளங்குவார்கள்...ஒற்றை பைசா கூட அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தில் இருந்து எடுத்ததில்லை...

    பதிலளிநீக்கு
  2. மேலே சொன்ன வரிகள் அனைத்தும் ...அப்பன்டமான பொய்... ஆம் எனது பரம்பரையும் சம்மாட்டி தான்... என் சிறு வயதில் இருந்து இன்றுவரை நான் பார்த்திருக்கிறேன் எம் படகில் செல்லும் மீனவர்களுக்கு என் பப்பாமார்களும் அய்யன்மார்களும் செல்வத்தை மனம்போல் வளங்குவார்கள்...ஒற்றை பைசா கூட அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தில் இருந்து எடுத்ததில்லை...

    பதிலளிநீக்கு

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...