பாட்டும் பதமும் 23.
"வசந்தகால கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்"! பேசாலைதாஸ்
தியாகம் என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றது. தன் காதலன் மீது காதலி, சந்தேகம் கொள்கின்றாள். ஒரு காலத்தில், ஊரே ஒரு மாதிரி கணக்கிட்ட காதலன், அவளுக்கு மட்டும் தெய்வமாக தெரிந்தான், பின்னர் என்னவோ அவனிடம் சந்தேகம் கொண்டு காதலை முறிக்க நினைக்கின்றாள், இதுதான் பாடலின் திரைக்காட்சி, அதற்கு நம் கவிஞன், கதாபத்திரங்களை சித்திரிப்பதை பாருங்கள்! வசந்த காலம், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள், அலையில் ஆடும் காகிதம், அதிலும் ஓர் காவியம் அப்பாடா, எளிமையான சொற் பிரயோகம், அது மட்டுமா? அலையில் ஆடும் காகிதம் அதற்கும் நிலையில்லா மனதர்களும் என்ன உறவுகள்? என்று தானே கேள்வியை எழுப்பிவிட்டு, தானே அதற்கு சமாதானமும் சொல்கின்றான் இப்படி, "உள்ளம் என்றும் ஒன்று, அதில் இரண்டும் உண்டல்லவா! " காதலி தன் காதலனுடன் சந்தேகப்பட்டு, உறவே வேண்டாம் என்று உதறுகின்ற ஒரு கட்டத்தை, நல்ல காலம் கல்யாணம் நின்று விட்டது என்பதை நயத்தோடு, கவிஞன் இப்படி பாடினான். " தேரில் ஏறும் முன்னமே! தேவன், உள்ளம் தெரிந்தது, நல்லவேளை திருவுளம், நடக்கவில்லை திருமணம்" என்று சொல்லி விட்டு, முறிந்த காதலுக்கு, நன்றி தேவா! என்று பாடலை முடிக்கின்றான். இந்த பாடல் என்றுமே என் மனதில் நீங்கா, இடம் பிடித்தது, அதற்கு என் தனிப்பட்ட காரணமும் உண்டு, உங்களோடு அதை பகிர்வதில் ஆசை ப்படுகின்றேன், நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த போது, எனது உயிர் நண்பி, மங்கள ராணி, அவளுக்கு பிறவியிலே கண்தெரியாது, அவளின்காதலன் சுப்பரமணியனுக்கும் கண் பார்வை கிடையாது, மக்களராணிக்கு என் ஓய்வு நேரங்களில், அவளுக்கு, அவளது பாட புத்தகங்களை, வாசித்து காட்டுவேன், நான் அப்பொழுது நண்பன் என்ற பருவமலரின் ஆசிரியாராக இருந்தேன், அதற்கு மங்களராணி, அழகான ஒரு கதை, அதுவும் தான் படிக்கும், மேசையை காதலனாக உருவகித்து எழுதிய அந்த கதை அருமையானது , பல்கலைக்கழ கம் விட்டு, பிரியும் காலம் வந்தது, நான் என் பேசாலைக்கு போக்வே ண்டும், பிரிய மனமில்லாது, பார்வையற்ற கண்களோடு, எனக்காக அவள் பாடிய பாடல் இது! நல்ல குரல் வளம் அவளுக்கு, " நன்றி நன்றி தேவா! உன்னை மறக்கமுடியுமா?" என்ற வரிக்காக, அவள் எனக்காக பாடிய பாடலை, நீங்களும் ஒரு முறை கேளுங்களேன்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக