மீனவர்களின் அம்பா பாட்டு பேசாலைதாஸ்
உழைக்கும் தொழிலாளிகள் அத்தனைபேருக்கும் அவரவர் தொழில் சார்ந்த பாடல் உண்டு. வேலைக்களைப்பு தெரியாமல் உற்சாகமாய் வேலை செய்ய அவர்கள் பாட்டுப்பாடுவார்கள். மீனவர் வாழ்விலும் பாட்டுக்கள் உண்டு. நெய்தல் நிலம் சார்ந்த, இலக்கியமாக அவை சங்ககாலம் தொட்டு தமிழர் கலைபண்பாடுடன் இந்த பாடல் இடம் பெறுகின்றது. சில பாடல்கள் சினிமாப்பாடல்களாவும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்பாடல் பற்றி பின்பு அலசுவோம். இப்போது கிராமிய மண்மணம் கமழும் இந்த மீனவர் பாடல்கள்,ஐலசா ஏலையா ஐலசா
ஐலசா ஏலையா ஐலசா
தெங் கரையின் மாவனத்தில்
தேக்குமரம் தேடி வெட்டி
தெப்பக்குஞ்சன் செய்த வள்ளம்
தெண்டித் தள்ளு அம்மிக்கல்லு -
ஐலசா ஏலையா ஐலசா
காத்தடிக்கும் கடலடிக்கும்
ஆத்துக் கன்னி முலையடிக்கும்
சோத்துப் பானை பேயடிக்கும்
நீத்துப் போன சீவியந்தான் -
ஐலசா ஏலையா ஐலசா
சோனகத்தான் நெய்த வலை
சொல்லிப் படும் அள்ளிப்போடு
வேலனோலை தோட்டுப் பறி
கொள்ளாப் பிலால் சுத்திப் படும் -
ஐலசா ஏலையா ஐலசா
வெள்ளாளம் பேய் ஆறுபணம்
புடுங்கித் திண்ட வேப்பங்கொங்கை
பொழுதில் வந்து பெருமீன் கேட்கும்
போகச் சொல்லித் தூக்கிப்போடு -
ஐலசா ஏலையா ஐலசா
முதலிபெண்டில் வேலிப்பொட்டில்
வீக்கம் தூக்கம் கேட்டு நிப்பாள்
அந்தணப் பேய் ஆளனுப்பி
ஐயனாரின் பேரைச் சொல்லும் -
ஐலசா ஏலையா ஐலசா
ஆஞ்சானைதான் சுண்டக் கட்டு
வாறான் கொஞ்சம் உன்னிப் பிடி
அணையாந்தீவை அணியம் வச்சு
ஈஞ்சாம் முனை ஏறக் கட்டு -
ஐலசா ஏலையா ஐலசா
(சில நூறாண்டுகள் பழமையான இந்த அம்பாப் பாடலின் கடைசி அடி பாதி மறந்தும், குழப்பமாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட இப்படித்தான் அந்த வரிகள்.
தவறாயிருப்பின் தெரிந்தவர்கள் இந்த வரியை சரியாகச் சொன்னால் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்.
"ஆஞ்சானைதான் சுண்டக் கட்டு
வாறான் கொஞ்சம் உன்னிப் பிடி
அணையாந்தீவை அணியம் வச்சு
ஈஞ்சாம் முனை ஏறக் கட்டு"
இது அனலைதீவையும், ஈச்சாமுனையையும் குறித்த வரிகளாகும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக