" உன் கண்ணில் நீர்வழிந்தால்! என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" பேசாலைதாஸ்
வியட்நாம் வீடு திரைப்படத்தில் வரும் இந்த பாடல், மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்டது. நம்மை நெஞ்சைப்பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளைமட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், 'KVM பிளஸ் புகழேந்தி சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்தமாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டி.எம்.எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப்பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட.......
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றிவரும் பஞ்கச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி...
உன்னைக்கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப்போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக் கொள்ள....
சாலச்சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக்காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மனாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மனாபனைக்காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.....
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக்குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்... என்...... தேவையை யாரறிவார்
உன்னைப்போல தெய்வம் ஒன்றேயறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்.... நீர் வழிந்தால்.... என் நெஞ்சில்.....
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)
பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக்கொள்ளும் ரசிகர் கூட்டம்.
எழுதியவர் இல்லை, இசைவடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவரும் போய்விட்டார்... ஆனாலும் இன்னமும் நெஞ்சுக்குள் உதிரம் கொட்டுகின்றதே இந்த பாடலை மீண்ண்டு மீண்டும் கேட்க,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக