சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ்
செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பாடலில் முதன்முதலில் வரும் விருத்தம் தான் இந்த சில்லென்று பூத்த சிறுநெரு ஞ்சிக்காட்டினிலே என்ற விருத்தம். செந்தமிழ் தேன்மொழியாள் " கவிஞர் கண்ணதாசன் " மாலை இட்ட மங்கை" என்ற படத்துக்கு எழுதிய மனதுகினிய காதல் பாட்டு. 1960 வெளிவந்த படம். பாடியவர் TR மகாலிங்கம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. இன்று வரை பல போட்டி மேடைகளிலும் பாடப்பட்டு,பாடுபவர் குரல் வளம் பரிசோதிக்கப் படும் பாடல் இந்தப்பாடல் அமைகின்றது.. ஆனால் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. ஒரு ஒப்பாரி பாட்டையும் ஒரு காதல் பாட்டிற்கு பல்லவியாக மாற்றும் கைவண்ணமும் மெட்டமைப்பும் ஒரு சிலருக்கே வரும். அங்குதான் கவிஞர் /மெல்லிசை மன்னன் அவர்கள் திறமை வெளி வருகிறது. அதைவிட சிறப்பு, டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் ஒரு ஞானியின் வெறுமை எப்போதும் படர்ந்திருக்கும். சில பாடல்களில் உறங்கி எழுந்த குழந்தையின் தலைகோதி செல்லங்கொஞ்சுகிற தாய்மையின் பிரதிபலிப்பு தென்படும். சோகத்தை மறைத்துக்கொண்ட ஒரு உலர் சந்தோஷம் உணரக் கிடைக்கும். ஆயிரமாயிரம் குரல்களுக்கு நடுவில் மகாலிங்கத்தின் குரலை இவையெல்லாம் தனிக்கச் செய்யும். இந்தப் பாடல் அப்படியானதொரு உதாரணம்!
அதைவிட சிறப்பு கவிஞர் கண்ணதாசனின் கவித்திறன், காதல் பொங்கும் இந்த பாடல் அத்தனை அழகு! காதல் ஒன்றி வர்ணிக்கும், இல்லாவிட்டால் துதிபாடும். இது இரண்டுக்கும் பக்கவாட்டில்! காதலின் வழியாக சக உயிரின் அன்பை சரண் அடையச்செய்கிற பாடல் இது. உண்மையான வர்ணனை, கடிதத்தின் இடைவரி போலவோ, சான்றிதழ் வாசகத்தின் அங்கீகாரம் போலவோ ஒருபோதும் தொனிக்காது, மாறாக அது கல்வெட்டின் வாக்கியம் போல தனிக்கும். கலையை, ரசனை விஞ்சுகிற இடம், அது தன்னை மறத்தல் எனும் புள்ளியில் சாத்தியப்ப டுகிறது. படர்க்கை விவரணையில் முழு பாடலையும் எழுதினார் கண்ணதாசன். கண்ணதாசன் இன்னொருவருக்கு தந்த பாடல் அல்ல, அது அவருடைய சொந்தப் பாடல். தயாரிப்பாளரே பாடல் ஆசிரியராக அமைந்த பாடல். ஒரு மேதைக்கு மறுவாழ்வு அளித்த பாடல். இப்போது உச்சரித்தாலும் வசீகரிக்க தவறாத பாடல். சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டிலே என்ற வரிகள், பிரிவாற்றாமையால் ஒப்பாரியில் விதைவை புலம்பியழும் ஒரு கிராமிய பாடல் வரிகள், இதனை முதலில் கம்பர் கையாண்டார், பின்னர் அதை என் கவி ஆசான் கண்ணதாசன் எடுத்தா ண்டார்.
" சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாளே" என்ற விருத்தத்தை கம்பர் கற்றறிந்ததே ஒரு சுவையான விடயம். ஒரு நாள் காலையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் காலை எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராத வாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.
அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், "சில்லென்று பூத்த...' என்ற சொற் றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அவர்கள், "அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.
மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள்.
காலம் என்கிற ஒன்று இந்த பாடலின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது அதனால் இதை பழைய பாடல் என்று சொல்லுவதை எந்த மனமும் ஏற்க மறுக்கிறது. இன்றுவரை என் மனதை கேட்கும் பொழுதெல்லாம் நெருடி வருடும் பாடல், அதை நீங்களும் கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக