பால் வண்ணம், பருவம் கண்டேன். வேல் வண்ணம் விழியில் கண்டேன் பேசாலைதாஸ்
இறைவனின் சாயல்பற்றி விவிலியம் சொல்கின்றபோது, இறைவனின் சாயலாக மனிதன் படைக்கப்பட்டான் என விபரிக்கின்றது. கம்பராமாயணத்திலும் இறைவனின் குணம் பற்றி விபரிக்கப்படுகின்றது, விஸ்வாமித்திரர் என்ற பெரும் துறவி, இராமனை சந்திக்கின்றார். "இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. அது போல இராமா, இதுவரை எப்படியோ தெரியாது, ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன். எங்கே இந்த உரையாடல் நடக்கின்றது? இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.கம்பன் அதனை மிக அழகாக, அழகு தமிழில் எழுதுகின்றார்.
‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி. இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி. மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? மை வண்ணத்து அரக்கி போரில். மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’
இந்த செய்யுளில் எத்தனை வண்ணம் கலந்திருக்கின்றது என்று பாருங்கள்?
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் உய்வண்ணம் துயர் வண்ணம் மை வண்ணம் மழை வண்ணம் கை வண்ணம் கால் வண்ணம் மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண் குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு). எனக்கு இராமயணத்தில் நம்பிக்கை இல்லை, ஆனால் கம்பரின் கொஞ்சு தமிழில் என்னையே நான் மறப்பதுண்டு. என்னைவிட என் கவி ஆசான் கண்ணதாஸன் தமிழ் கம்பனை விட விஞ்சு தமிழாக எனக்கு தெரிகின்றது. கவியரசு இந்த செய்யுளை அழகிய ஒரு சினிமா பாடலாக தந்திருக்கின்றார்.
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
வாடிநிற்கும் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக